நிலைகுலைந்தது 'அம்மா'வா, பட்ஜெட்டா? தமிழக சட்டசபையில் விவாதம்!
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதாவை பற்றி கருத்து கூறியது தொடர்பாக நிதியைமைச்சர் அன்பழகனுக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதில் அளித்து நிதிஅமைச்சர் அன்பழகன் பேசுகையில்,
'இங்கு அரசின் பட்ஜெட்டினை பலரும் பாராட்டி பேசியதை தாங்கிக்கொள்ளமுடியாத துன்பம் ஏற்பட்டு, இங்கு பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம், சென்னை நதிநீர் சீரமைப்பு அறக்கட்டளை உள்ளிட்ட சில கருத்துக்களை சொன்னார்.
தேர்தலுக்காக வந்திருக்கிற பட்ஜெட் என்று சொல்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. இந்த பட்ஜெட், பொதுமக்கள் விரும்புவதை எதிர்நோக்கி செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல அடுத்த தேர்தலுக்கும் சேர்த்துத் தான் இந்த பட்ஜெட். கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தில் இந்நிதியாண்டுக்கு ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு 21 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படவுள்ளது. அதற்கு இந்த ஆட்சி மறுபடியும் வருமா என்கிறார்கள். கண்டிப்பாக வருவோம். வந்து கட்டித் தருவோம்.
இதை நிலைகுலைகிற பட்ஜெட் என்று எதிர்க்கட்சித்தலைவர் சொல்லியிருக்கிறார். அவர்கள் நிலைகுலைந்தால் நான் என்ன செய்ய முடியும்' என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம், 'இந்த அறிக்கை பென்னாகரம் தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்டதாகும்.
தற்சமயம், சபையில் ஜெயலலிதா இல்லை. அவர் வெளியில் இருந்து அறிக்கை விட்டதை விமர்சித்து, சட்டப்பேரவையில் நிதிஅமைச்சர் விவாத பொருளாக எடுத்திருக்கிறார். அனைவரையும் இப்படி பேச அனுமதிப்பீர்களா?' என்றார்.
அதற்கு அமைச்சர் பொன்முடி, 'முரசொலியில் பட்ஜெட் பற்றி எழுதிய ஒருவர் மீது உரிமை மீறல் பிரச்னையை அவையில் கொண்டு வந்தீர்களே?' என்றார்.
அதற்கு பதில் அளித்த அன்பழகன், 'இந்த சட்டமன்றத்தில் உலகத்தில் உள்ள எல்லா விஷயம் பற்றியும் பேசலாம். இந்த சட்டமன்றத்துக்குள் வரமுடியாதவர்கள் பற்றி பேசுவதாக இருந்தால் எச்சரிகையாக பேசவேண்டும்.
இந்த நிதிநிலை அறிக்கை நிலைகுலைந்த அறிக்கை என்று சொன்னதை பற்றித்தான் சொன்னேன். அது குற்றச்சாட்டாக சொல்லலை. அது குற்றச்சாட்டு என்று கருதினால் நான் வாபஸ் வாங்குகிறேன்.
சொல்கிற வார்த்தையெல்லாம் குற்றச்சாட்டு ஆகாது. அவர்களுக்காக வேண்டுமென்றால் விட்டு தருகிறேன். இப்போது 'அம்மா' நிலைகுலையாமல் இருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்கிறேன்' என்றார்.