லாரி விபத்து - ரூ.1 கோடி மது, விசைத்தறி எந்திரம் தீயில் கருகி நாசம்
செங்கல்பட்டு: நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்து, அவற்றில் இருந்த மதுபாட்டில்கள், விசைத்தறி எந்திரங்கள் கருகி நாசமாயின. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என தெரிகிறது.
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு மதுபான நிறுவனத்தில் இருந்து பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி விழுப்புரம் டாஸ்மாக் குடோனுக்கு சென்று கொண்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு அந்த லாரி செங்கல்பட்டு அடுத்த பழவேலி ஆற்றங்கரை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென டயர் பழுதடைந்த்து. இதனால் லாரியை சாலையோரம் நிறுத்தி வைத்தனர்.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து விசைத்தறி எந்திரம் ஒன்றை ஏற்றிக் கொண்டு குமாரபாளையம் நோக்கி மற்றொரு லாரி சென்றது.
அப்போது, சாலையோரம் பழுதாகி நின்ற மதுபான லாரி மீது விசைத்தறி எந்திரத்தை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. மது பாட்டில்கள் வெடித்து சிதறின.
தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இரண்டு லாரிகளிலும் இருந்த மதுபான பாட்டில்கள், விசைத்தறி எந்திரம் ஆகியவை முற்றிலுமாக கருகி நாசமாயின. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications