போலந்து அதிபரின் மரணம் – போலாந்து வாழ் இந்தியர்கள் சோகம்

இதேபோல, போலந்து வாழ் இந்தியர்களும் கசின்ஸ்கியின் மரணத்தால் சோகமடைந்துள்ளனர். போலந்து ஆரசியலில் கடந்த 10 ஆண்டு காலமாக தீவிரமாக செயல்பட்டு வந்த கசின்ஸ்கி, கறாரான கத்தோலிக்கராக அறியப்பட்டவர் என்றாலும் மதச்சார்பற்ற உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடியவர் என போலந்தில் உள்ள இந்தியர்கள் கூறுகின்றனர்.
வார்சா மேயராக கசின்ஸ்கி இருந்த போது, குருத்வாரா அமைப்பதற்கு எந்தவித சுணக்கமும் இன்றி அனுமதி கொடுத்தார். இதன் மூலம் கிழக்கு ஐரோப்பாவின் ஒரே குருத்வாராவாக அது திகழ்கிறது.
அதோடு, வார்சாவில் இந்து கோயிலுக்கும் கசின்ஸ்கிதான் ஒப்புதல் அளித்தார். இந்திய ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவர்.
எப்போதுமே இந்தியா மீது ஒரு 'சாப்ட் கார்னர்' உள்ளவர் என அறியப்பட்டவர். இந்திய பயணத்துக்காக மிகவும் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
கசின்ஸ்கி இறந்ததை தங்களின் சொந்த இழப்பாகவே, வார்சாவில் உள்ள இந்தியர்கள் கருதுகிறார்கள் என்று இந்தோ-போலிஷ் தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜே.ஜே.சிங் கூறுகிறார்.
ஜே.ஜே.சிங் வார்சாவில் உள்ள குருத்வாரா கமிட்டி தலைவராகவும் உள்ளார்.
போலந்தில் சுமாராக 3 ஆயிரத்து 500 இந்தியர்கள் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்கள். தாராள சந்தை பொருளாதார முறையைப் பின்பற்றியது, ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தது ஆகியவற்றுக்கு பின்னர் தொழில் வாய்ப்புக்காக இந்தியர்கள் ஏராளமாக போலந்திற்கு வந்துள்ளனர்.
தற்போது வார்சாவின் முக்கிய நபர்களாக உள்ள அவர்கள், இந்தியாவின் உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடிய நீண்டகால நண்பரை நாம் இழந்துவிட்டோம் என கவலை தெரிவிக்கின்றனர்.
கிராகோ நகரில் உள்ள இந்திய போலந்து கலாச்சார கமிட்டியும் கசின்ஸ்கி மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இதேபோல, 'இந்தியாவின் உண்மை நண்பரை இழந்து விட்டோம்' என்று தனது இரங்கல் அறிக்கையில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் தெரிவித்துள்ளார்.
போலந்து சபாநாயகருக்கு பிரதீபா பாட்டீல் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில்,
'அதிபர் லே கசின்ஸ்கி மரணம் குறித்து கேள்விப்பட்டதும் நான் பெரும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இவரது மரண துக்கத்தில் இந்தியாவும் போலந்து நாட்டு மக்களுடன் துன்பத்தை பகிர்ந்து கொள்கிறது.
கடந்த ஆண்டில் அதிபர் கசிஸ்கி உடனான சந்திப்பை நான் இப்போது நினைத்து பார்க்கிறேன். இந்தியா - போலந்து நாட்டு நல்லுறவுக்கு துணையாக இருந்த அவர், இந்தியாவின் உண்மையான நண்பராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications