அதிமுக நிர்வாகி படுகொலை- கொலையாளிகளை விரைவில் பிடிக்க ஜெ. கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அதிமுக செயலாளர் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலையாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், புஞ்சையரசன் தாங்கல் ஊராட்சி அதிமுக செயலாளரும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தவருமான கிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்விரோதம் காரணமாக கிருஷ்ணன் கொலை செய்யபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் யூனியன் ஒன்றியத் தலைவராக இருந்த ஸ்ரீதரும், கிருஷ்ணனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட், சாராய வியாபாராம், கட்டப் பஞ்சாயத்து என கூட்டாக செய்து வந்தனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தத்தில் பிரிந்தனர். முன் விரோதம் காரணமாக இவரை ஏற்கனவே 4 முறை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்து வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்த கிருஷ்ணனை 6 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா,
'இந்த படுகொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று காவல்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
கிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் ஜெயலலிதா அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட கிருஷ்ணனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications