வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடக் கூடாது - உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை
நெல்லை: நீதிமன்ற புறக்கணிப்பில் வக்கீல்கள் புறக்கணிக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகீம் கலிபுல்லா கூறியுள்ளார்.
நெல்லை நீதிமன்றத்தில் சீனியர் வக்கீலாகவும், முன்னாள் வக்கீல் சங்க தலைவராகவும் பணியாற்றியவர் கருப்பையா. இவரது உருவ பட திறப்பு விழா நெல்லை நீதிமன்ற வாளகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட நீதிபதி விஜயராகவன் தலைமை வகித்தார். வக்கீல் சங்க தலைவர் முத்துராமலிங்கம் வரவேற்றார். வக்கீல் கருப்பையா உருவ படத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகீம் கலிபுல்லா திறந்து வைத்து பேசியதாவது:
நீதிபதிகள், வக்கீல்கள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்ததுதான் நீதித்துறை. வக்கீல் கருப்பையாவுக்கு ஜூனியராக இருந்தவர்கள் வக்கீல்களாக மட்டுமல்லாமல் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளனர்.
வக்கீல் தொழில் என்பது மிகவும் உன்னதமான தொழில். சமூதாய சேவை செய்வதற்கு இதன் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பலர் வக்கீல்களாக இருந்துள்ளனர்.
பாரம்பரியம் மிக்க வக்கீல் தொழிலை காக்க வேண்டியது நம் கடமை. நெல்லை வக்கீல்கள் சங்கம் பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. தொழில் தர்மத்தை கடைபிடித்து நமது மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
கட்சிக்காரர்கள், நீதிபதிகள், எதிர்கட்சிகாரர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும். சமுதாயத்திற்கு, வீட்டிற்கு, நாட்டிற்கு ஆற்ற வேண்டிய சேவை நிறைய உள்ளது.
கட்சிகாரர்கள் வழக்கை ஒப்படைக்கும்போது வக்கீல் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். வழக்கை நடத்தும்போது கோர்ட்டுக்கு குந்தகம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். நீதிபதியும் உங்களை சார்ந்தவர் தான். நீதிமன்றமே உங்கள் வீடு.
நிறைய தீர்ப்புகளை படித்து வாதாட வேண்டும். வக்கீல் தொழிலி்ன் கண்ணியத்தையும், கவுரவத்தையும் காக்க வேண்டும். வக்கீல்கள் தேவையில்லாமல் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட கூடாது. இதனால் கட்சிகாரர்கள் மட்டுமின்றி இளம் வக்கீல்களும் பாதிக்கப்படுகின்றனர்.
நீதிமன்ற புறக்கணிப்பு என்பது நமது உடலில் வருகிற நோயை போன்றது. எனவே அதை தவிர்க்க வேண்டும். நீதித்துறையின் கண்ணியத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்று நீதிபதி பேசினார்












Click it and Unblock the Notifications