வாஷிங்டனில் மன்மோகன் சிங் – இன்று ஒபாமாவுடன் சந்திப்பு

பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ஒரு வார காலம் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
நேற்று வாஷிங்டன் வந்து சேர்ந்த பிரதமரை, ஆன்ட்ரூஸ் விமான தளத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார்.
நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபர் உள்ளிட்ட 42 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார். ஆனால் அவருடன் மன்மோகன் சிங் சந்திப்பு நடக்குமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மையத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மன்மோகன் முன்வைப்பார் என தெரிகிறது.
இன்று ஒபாமாவுடன் சந்திப்பு
முன்னதாக இன்று அதிபர் பாரக் ஒபாமாவை, பிரதமர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, அமெரிக்க - இந்திய இரு தரப்பு உறவுகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ஒபாமாவுடன் டேவிட் கோல்மேன் ஹெட்லி குறித்தும் முக்கியமாக பிரதமர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட்லியிடம் இந்திய அதிகாரிகளை விசாரிக்க விடாமல் எப்பிஐ இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக ஒபாமாவிடம் மன்மோகன் சிங் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்திக்கும் போதும் ஹெட்லி விவகாரம் முழு அளவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications