காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகள் அதிகரித்து விட்டனர் – கத்காரி

பாஜக தலைவர் நிதின் கட்காரி, இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். இன்று பிற்பகல் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம், நாட்டில் ஏழைகள் அதிகரிப்பது வழக்கம். ஏழைகளாக இருப்பவர்கள் மேலும் ஏழைகளாக மாறுவார்கள். அதேபோல பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறி விடுவார்கள். இதுதான் காங்கிரஸ் ஆட்சியின் லட்சணம்.
தமிழகத்தில் பாஜகவை வளர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாஜக தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்றார் கத்காரி.
முன்னதாக இன்று காலை பாஜக தலைமையகமான கம்மலாலயத்திற்குச் சென்றார் கத்காரி. அங்கு மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நதி நீர் இணைப்புக்கு ஆதரவு
முன்னதாக நேற்று இரவு மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
'நாக்பூரில் போஸ்டர் ஒட்டுகிற சாதாரண தொண்டனாக இருந்த நான் இன்று கட்சித் தலைவராக உயர்ந்திருக்கிறேன். அதுதான் பாஜக.
நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. அதில் 50க்கும் மேற்பட்ட கட்சிகள் தான் பெரிய கட்சிகள். ஐந்து கட்சிகள் மட்டுமே நாடு முழுவதும் செயல்படுகின்றனன.
நாடு முழுவதும் மின்பற்றாக்குறை நிலவுகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஐந்தே ஆண்டுகளில் முன்பே அறிவித்தது போல நதிகளை தேசியமயமாக்கி, தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்போம்.
கங்கையையும், காவிரியையும் இணைப்பதன் மூலம் தமிழகத்திற்கு 4000 டிஎம்சி தண்ணீர் தருவோம்.
இந்துத்துவா என்பது இந்திய மக்களுக்கானது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் ஊக்கமளிக்கும் அணு விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது பாஜகதான்
பாஜக தனி மனித கட்சி அல்ல. சமூக, பொருளாதார மாற்றத்தை கொண்டு வருவதே எங்கள் கட்சியின் நோக்கம்.
பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் 15 தமிழர்கள், பாஜக மூலம் வெற்றி பெற்றுள்ளனர். எனவே வரும் தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிட்டு, வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
நீங்கள் அனைவரும் கிராமங்களுக்கு சென்று பாஜகவின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அவர்களில் ஒருவராகி கட்சியை பலப்படுத்துங்கள்' என்றார்.












Click it and Unblock the Notifications