டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: 4 லட்சம் பேர் எழுதினர்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்றனர்.
நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார்-பதிவாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி, வருவாய் துறை உதவியாளர் உள்ளிட்ட பதவி இடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றுள்ளது.
மொத்தம் 1,225 காலி இடங்களுக்கு நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
இளநிலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், என்ஜினீயர்கள், வக்கீல்கள், விவசாய பட்டதாரிகள் உள்பட 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் இப்பதவிகளுக்கு முன்னதாக விண்ணப்பம் செய்தனர்.
அவர்களில் தகுதியுள்ள 4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வுகள் நடந்தன.
சென்னையில் மட்டும் 256 இடங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடந்தன. சாந்தோம் செயிண்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற தேர்வில் திருமணமான பெண்கள் பலர் தேர்வெழுதினர்.
கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள், திருமணமான தம்பதியர் பலர் நிறைய மையங்களில் தேர்வு எழுதினர்.
பரீட்சை நடக்கும் அறையில் செல்போன், கைப்பை கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்பதால் வாசல் அருகே மொத்தமாக அவற்றை ஒருவர் வாங்கி வைத்திருந்தார்.
தேர்வு நடைபெற்ற ஒவ்வொரு அறையிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications