காலாவதி மருந்து வழக்கு எதிரொலி - மருந்து வணிகர் சங்கத்திலிருந்து மீனாட்சி சுந்தரம் நீக்கம்
சென்னை: காலாவதி மருந்து மோசடி வழக்கில் சிக்கிய மீனாட்சி சுந்தரம், மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காலாவதி மருந்துகளை புதியது போல் மாற்றியும், போலி மருந்துகள் தயாரித்தும் போலீசில் சிக்கியுள்ள மீனா ஹெல்த்கேர் அதிபர் மீனாட்சி சுந்தரம் சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.
மோசடித்தனம் அம்பலமாகி தற்போது மீனாட்சி சுந்தரம் மற்றும் கூட்டாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிதாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
குறிப்பாக சங்கத் தலைவராக இருந்துவந்த மீனாட்சி சுந்தரம் பதவி நீக்கப்பட்டார். சங்கத்தின் புதிய தலைவராக என்.ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
செயலாளராக பி.ராஜேந்திரனும், பொருளாளராக ஆர்.ராஜாராமும் நியமிக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகளை பின்னர் தேர்ந்தெடுப்பது என பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின் சங்கத் தலைவர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
'மருந்து வணிகம் என்பது, உயிர்களை காக்கக்கூடிய மிக உன்னதமான தொழில். அதில் மோசடிகளை செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தமைக்கு முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற புகார்கள் தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
காலாவதியாகும் நிலையில் உள்ள மருந்துகளை தனியாக பிரித்துவைத்து, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மருந்து தயாரிப்பாளர்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
மருந்து வாங்கும் பொதுமக்களுக்கும், அரசு மற்றும் மருந்து தயாரிப்பாளர்களுக்கும் இடையே பாலமாக நாங்கள் நல்ல முறையில் செயல்பட உறுதி எடுத்துள்ளோம்.
காலாவதி மருந்து வழக்கில் சிக்கிய சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டவர்களை அடிப்படை உறுப்பினர்கள் அந்தஸ்த்தில் இருந்து நீக்கிவிட்டோம்' என்றனர்.












Click it and Unblock the Notifications