விலைவாசி உயர்வை கண்டித்து 27ம் தேதி அதிமுக, 12 கட்சிகளின் 'பாரத் பந்த்'!
டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 27ம் தேதி பாரத் பந்த்' நடத்த அதிமுக உள்ளிட்ட 13 கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 15ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிரான நடவடிக்கை குறித்து கூட்டாக வியூகம் வகுக்க காங்கிரஸ், பாஜக கூட்டணிகளில் இடம்பெறாத பிற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது.
(இவர்கள் தான் மூன்றாவது அணி என்றும் நான்காவது அணி என்றும் கூறிக் கொண்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க முயன்று, பிரதமர் பதவி எனக்கே என்று அவர்களுக்குள்ளேயே மோதிக் கொண்டவர்கள். தேர்தலில் இந்தக் கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது)
இக்கூட்டத்தில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், தெலுங்கு தேசம், பிஜு ஜனதாதளம், பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, லோக் ஜனசக்தி, மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லோக்தள், ராஷ்ட்ரீய லோக்தள் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்க உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் கூட அக் கட்சியின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
அதிமுக சார்பில் மைத்ரேயன் பங்கேற்ற இக் கூட்டத்தில் விலைவாசி உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உர விலை உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
விலைவாசி உயர்வுக்கு எதிராக வரும் 27ம் தேதி நாடுதழுவிய பந்த் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீது 13 கட்சிகளும் இணைந்து, பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி வெட்டுத் தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டு்ள்ளது.
இந்த வெட்டுத் தீர்மானத்துக்கு பாஜக, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவற்றின் ஆதரவைப் பெறவும் இந்தக் கட்சிகள் முயன்று வருகின்றன. இந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் வெட்டுத் தீர்மானத்தை தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணி பெரும் சிரமத்துக்கு ஆளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மத்திய அரசை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications