குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க 8 மாவட்டங்களுக்கு ரூ.14 கோடி- தமிழக அரசு ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் எட்டு மாவட்டங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.14 கோடி வழங்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 110வது விதியின் கீழ் ஓர் அறிக்கை வாசித்தார்.
அதில், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் எட்டு மாவட்டங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.14 கோடி வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இந்த நிதியின் மூலம், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், தூர்வாரி கிணறுகளை ஆழப்படுத்துதல், பம்பு செட்டுகளை பழுது பார்த்தல் முதலிய பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
விருதுநகர், திருவள்ளூர், தர்மபுரி, சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய எட்டு மாநிலங்களுக்கு சேர்த்து ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.4 கோடி கடந்த 12ம் தேதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக பிற மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்படும் அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு தேவையான நிதி உதவி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை இயல்பான மழை அளவான 990.1 மிமீ மழைக்குப் பதிலாக சராசரியாக இரண்டு சதவிகிதம் அதிகமாக - அதாவது 1010.4 மிமீ மழை பெய்துள்ளது.
இருப்பினும் ஒருசில மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு குறைவாக உள்ளது. 2010ம் ஆண்டிலும் ஜனவரி முதல் இதுவரை தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு குறைவாகவே பெய்துள்ளது.
கடுமையான கோடை வெயில் காரணமாக ஒருசில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அரசுக்குத் தெரிவித்துள்ளார்கள் என்றும் துணை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications