சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனை கை நீட்டித் திட்டிய அதிமுக எம்எல்ஏ-பரபரப்பு
சென்னை: சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனை நோக்கி ஓடி வந்த அதிமுக எம்எல்ஏ கலைராஜன் கையை நீட்டிப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து, கடந்த செவ்வாய்க்கிழமை அவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன் அதிமுக எம்.எல்.ஏ. கலைராஜனை ஒருமையில் பேசினார், கொச்சைப்படுத்தும் விதத்தில் விமர்சித்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் ஆவுடையப்பன், அன்றைய தினம் வி.பி. கலைராஜன், அமைச்சர் துரைமுருகன் இருவரும் பேசியதும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கத் தேவையில்லை, உட்காருங்கள் என்றார்.
அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட ஆரம்பித்தனர். இந் நிலையில் பின் வரிசையில் இருந்த கலைராஜன் அமைச்சர் துரைமுருகனை நோக்கி ஓடி வந்து அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையனின் இருக்கை அருகே நின்று கொண்டு துரைமுருகனை நோக்கி கையை நீட்டி ஏதோ பேசினார்.
இதற்கு பதிலடியாக திமுக எம்எல்ஏக்கள் பலரும் பதிலுக்கு அவரைத் திட்டினர். இரு தரப்பிலும் போடா, வாடா' என்ற வார்த்தைகள் சரமாரியாக பயன்படுத்தப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கலைராஜனை உடன் இருக்கைக்கு திரும்புமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் எச்சரித்தார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் க. அன்பழகன், அன்று கலைராஜன் கடுமையாக பேசப்போய், அதற்கு பதிலாக துரைமுருகன் பேசி இருக்கிறார். துணை முதல்வர் கேட்டுக் கொண்டபடி அன்றே அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டுவிட்டன. எனவே அந்தப் பிரச்சனையை இப்போது எடுப்பது நியாயமல்ல என்றார். இதைத் தொடரந்து அவையில் அமைதி ஏற்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் பரிதி இளம் வழுதி சபாநாயகரிம் சென்று ஆளும் கட்சியான தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் முறையிட்டார்.
எம்.எல்.ஏ. ஒருவர் இருக்கையை விட்டு எழுந்து வந்து அமைச்சரை எச்சரிக்கிறார். இதனை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள்? அமைச்சர்களான எங்களுக்கு என்ன பாதுகாப்பு? சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பரிதி.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏவை எச்சரித்து அனுப்பியுள்ளேன். மீண்டும் இதுபோல நடந்து கொண்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications