தமிழக விவசாயிகளுக்கு ரூ.2500 கோடி பயிர்க்கடன்!
சென்னை: தமிழக விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ 2500 கோடிக்கு பயிர்க் கடன்கள் வழங்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கோ.சி. மணி பேசியதாவது:
2009-2010ம் ஆண்டில் ரூ.2,000 கோடி அளவிற்கு பயிர்கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த குறியீட்டையும் தாண்டி பயிர்க்கடன் ரூ.2,169 கோடிக்கு வழங்கப்பட்டது. 2010-2011ம் ஆண்டில் தமிழக விவசாயிகளுக்கு ரூ.2,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக ரூ.23,793 கோடிக்கு வைப்பு தொகை உள்ளது. விவசாய விளைபொருட்கள் விற்பனையில் இருமடங்கு சாதனை புரிந்து கூட்டுறவு விற்பனை சங்கங்கள் அனைத்தும் லாபத்தில் செயல்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 22,145 விவசாய கூட்டு பொறுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 10,000 குழுக்கள் உருவாக்கப்பட்டு ரூ.10 கோடி சுழல் நிதி வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7 கோடி கடன் வழங்கப்படும். குறுகிய கால கூட்டுறவு கடன் அமைப்புகள்- நீண்டகால கூட்டுறவு கடன் அமைப்பு மூலம் வேளாண் பணிகளுக்கு ரூ.300 கோடி அளவிற்கு கடன் வழங்கப்படும்.
சிறு வணிக கடன் ரூ.5,000லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ரூ.150 கோடிக்கு தானிய ஈட்டு கடன் வழங்கப்படும். 100 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் சேவை மையம் தொடங்கப்படும்.
திருவள்ளூர், தர்மபுரி, கடலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் கூட்டுறவு அலுவலக வளாகங்கள் கட்டப்படும். பொள்ளாச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.50 லட்சம் செலவில் தேங்காயை கொப்பரையாக மாற்றும் நிலையம் அமைக்கப்படும்.
கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ரூ.25 கோடிக்கு தரமான விதைகள் விற்பனை செய்யப்படும். பொதுமக்களுக்கு நம்பகமான தரமான மருந்து நியாயமான விலையில் கிடைக்க கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 50 மருந்து கடைகள் கூடுதலாக தொடங்கப்படும்.
நகை அடமானம் கேட்டால்...
ராஜாஅண்ணாமலை புரம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, கோவை, வேலூர் ஆகிய 5 இடங்களில் ரூ.1 கோடி செலவில் சுய சேவை பிரிவுகளை நவீனமயமாக்கி விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகை ஈட்டின்பேரில் மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படும் என்று எங்கேயாவது கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் காலி பணியிடங்களை நிரப்ப இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் கோ.சி.மணி.












Click it and Unblock the Notifications