சசி தரூரிடம் ரகசியத் திட்டம் உள்ளது – லலித் மோடி கூறுகிறார்
மும்பை: ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் தரூரிடம் ரகசியத் திட்டம் புதைந்துள்ளது என்று கூறியுள்ளார் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், ஐபிஎல் கொச்சி விவகாரத்தை தேவையில்லாமல் பெரிதாக்க விரும்புகிறார் தரூர். ஆனால் அது நடக்காது. மிக வலுவான ஒரு கட்டமைப்பாக ஐபிஎல் உள்ளது. அதை சீர்குலைக்க நடக்கும் முயற்சிகள் பலிக்காது. எந்தவிதமான உள்நோக்கத்துடன் கூடிய செயல்பாடுகளுக்கும் பணிந்து போகாமல் நாங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுவோம்.
தனது ஆதிக்கத்தை இங்கு நுழைக்க முயலும் தரூரின் செயல்களை முறியடிப்போம். தரூரின் மனதில் வேறு ஒரு திட்டம் உள்ளது. ஆனால் அது நிச்சயம் பலிக்காது. நான் அதை விட மாட்டேன்.
ஐபிஎல் கொச்சி அணியின் நிர்வாகத்தை மெதுவாக அபுதாபிக்குக் கொண்டு செல்ல முயலுகிறார் தரூர். அது நடக்கவே நடக்காது. நான் நிச்சயம் அதை அனுமதிக்க மாட்டேன்.
இன்று எனக்குக் காலை கிடைத்த ஒரு தகவலின்படி எனக்கு வேண்டிய ஒருவரை அணுகிய தரூர், அபுதாபிக்கு அணியை கொண்டு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் தரூரின் எண்ணத்திற்கு அடிப்படையே இல்லை. இந்தியாவில் விளையாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட, இந்திய அணிகளைக் கொண்ட அமைப்புதான் ஐபிஎல். எனவே எந்த அணியும் இந்தியாவைத் தாண்டி வெளியே போய் வேறு அணிகளுடன் விளையாட முடியாது.
ஐபிஎல் கொச்சி விவகாரத்தில் எந்தவிதமான அரசியல் நிர்ப்பந்தங்களும், நெருக்கடிகளும் இல்லை. யாரும் எங்களுக்கு நெருக்கடி தரவில்லை. ஏலத்தில் வென்றவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். அதற்கு அவர், நீங்கள் கொச்சி என்ற பெயரில் வென்றுள்ளீர்கள். எனவே அதையை பராமரியுங்கள் என்று கூறி விட்டார். பின்னர் அவர்கள் என்னிடம் திரும்பி வந்தனர். அகமதாபாத்துக்கு மாற்றுமாறு கோரினர். ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் அதைச் செய்வது இயலாது என்று கூறி விட்டேன்.
அகமதாபாத்துக்கும் கூட ஏலம் நடந்தது. அதில் அவர்கள் போட்டியிட்டுருக்கலாம். அதை தேர்வு செய்திருக்கலாம். அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது.
எனது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் கிரிக்கெட் வாரியத் தலைவர் மனோகரை இணை ஆணையராக நியமிக்கும் யோசனையும் வாரியத்திடம் இல்லை. அப்படி ஒன்று நடக்காது என்று திடமாக நம்புகிறேன்.
விதிமுறைகளின்படி இணை ஆணையர் என்ற பதவிக்கான வழிமுறைகள் கிடையாது. இது பிசிசிஐ, ஐபிஎல் இடையிலான விவகாரம். இதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
இந்த விவகாரத்தில் பிசிசிஐக்கும், ஐபிஎல்லுக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் இதுபோன்ற பிளவுகள் முன்பும் இருந்தன. இப்போதும் இருக்கிறது. எதிர்காலத்திலும் அது போல இருக்கும். ஆனால் இது பெரிய பிரச்சினையே இல்லை. இதனால் ஐபிஎல்லின் செயல்பாடுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
ஐபிஎல் நாங்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய குழந்தை. அதை நாங்கள் பாதுகாப்போம், பத்திரமாக வைத்திருப்போம் எனறார் மோடி.












Click it and Unblock the Notifications