பெளத்தத்திற்கு மாறிய தலித்களும் தாழ்த்தப்பட்டவர்களே'
சென்னை: புத்த மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களும் தாழ்த்தப்பட்டவர்களே என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடலூர் மாவட்டம் ஓமகுளம் கிராமத்தில் இந்து ஆதிதிராவிடர் குடும்பத்தில் 1975-ம் ஆண்டு பிறந்தேன். முதுகலைப் பட்டத்துக்குப் பிறகு, இப்போது பி.எல். பட்டப்படிப்பு படித்து வருகிறேன்.
எனது விருப்பத்தின் பேரில் புத்த மதத்தை 2008 ஜூலை மாதத்தில் தழுவினேன். அதன் பிறகு, என்னுடைய ஜாதி சான்றிதழில் புத்த மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் என்று திருத்தக் கோரி சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.
ஆனால், எனது விண்ணப்பத்தைப் பரிசீலித்த வட்டாட்சியர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் புத்த மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் இனம் இடம்பெறவில்லை என்று கூறி கோரிக்கையை நிராகரித்தார்.
வட்டாட்சியரின் இந்த உத்தரவை ரத்து செய்வதோடு, எனது சான்றிதழில் புத்த மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் என்ற திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குமார் கோரினார்.
இந்த மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், புத்த மதத்தைத் தழுவிய ஆதிதிராவிடர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் வகையில் 1990-ம் ஆண்டு அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பான ஒரு வழக்கில் புத்த மதத்தைத் தழுவிய ஆதிதிராவிடர்களை, தாழ்த்தப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, புத்த மதத்தைத் தழுவிய ஆதிதிராவிடர்களையும் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்ற அரசியல் சட்டத் திருத்தம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிதம்பரம் வட்டாட்சியர், மனுதாரரின் கோரிக்கையைப் புதிதாகப் பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய உத்தரவை அவர் 4 வாரங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications