அதிமுக ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் மின்சாரம் தருவோம்- ஜெ.
நெய்வேலி: திமுக ஆட்சியில் மின் நிர்வாகம் மோசமாக இருப்பதால் ஆண்டுக்கு ரூ. 2522 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வகை செய்வோம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா
தமிழகத்தில் நிலவும் மின் தடை மற்றும் பற்றாக்குறையைக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா தலைமையில் இன்று நெய்வேலியில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்காக ஜெயலலிதா இன்று மாலை நெய்வேலிக்கு வந்தார். நெய்வேலி வந்து சேர்ந்த அவருக்கு அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நெய்வேலி 9வது வட்டத்தில் 19 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டு இது நாள் வரை திறக்கப்படாமல் இருந்த எம்.ஜி.ஆர். சிலையை ஜெயல்லிதா திறந்து வைத்தார்.
பின்னர் அண்ணா திடலில் நடந்தபிரமாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார்.
அப்போது ஜெயல்லிதா பேசுகையில், திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு மாநிலமாக மாறி விட்டது தமிழகம். மின் நிறுவனங்களுக்கான நிலக்கரி இறக்குமதி செய்வதில் இமாலய ஊழல் நடந்துள்ளது.
தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்வதாலும், மின் நிலையங்கள் பரமாரிப்பு முறையாக இல்லாததாலும், தமிழக அரசுக்கு ஆண்டு தோறும் ரூ. 2522 கோடி அளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் பின் பற்றாக்குறையும், மின் தடையும் நீங்கும். தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார் ஜெயல்லிதா.