மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலுடன் லோடு ஆட்டோ மோதல் – அதிமுக பிரமுகர் பலி
நாங்குநேரி: நாங்குநேரி அருகே ஆள் இல்லா ரயில்வே கேட்டில் லோடு ஆட்டோ மீது மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அதிமுக கிளை செயலாளர் பலியானார்.
நாகர்கோவிலில் இருந்து மும்பை எக்ஸ்பிரஸ் இன்று காலை புறப்பட்டது. 8 மணி அளவில் நாங்குநேரி ராஜாக்கமங்கலம் ஆள் இல்லா ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு லோடு ஆட்டோ வேகமாக தண்டவளத்தை கடக்க முயன்றது. இதை கவனித்த ரயி்ல் இன்ஜின் டிரைவர் வேகத்தை குறைத்து நிறுத்த முயன்றார். எனினும் முடியவில்லை. இதனால் ரயில் வேகமாக லோடு ஆட்டோ மீது மோதியது.
மோதிய வேகத்தில் சுமார் 1 கிமீ தூரத்திற்கு ஆட்டோவை ரயில் இழுத்து சென்றது. இதில் லோடு ஆட்டோ சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.
அதி்ல் இருந்த டிரைவர் முருகன் சம்பவ இடத்திலேயே உடல் சிதைத்து பலியானார். அதிர்ஷ்டவசமாக அந்த லோடு ஆட்டோவில் வேறு யாரும் இல்லாததால் வேறு உயிர் சேதம் எதுவும் இல்லை.
பலியான டிரைவர் முருகன் வள்ளியூர் அருகே உள்ள மயிலாப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஆணைக்குளம் ஊராட்சி அதிமுக கிளை செயலாளராக இருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. அதற்குள் இந்த கோர விபத்து நடந்து விட்டது.
சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், ரயில்வே மேலாளர் கல்யாணி, மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே கடந்த 2 வருடத்தி்ற்கு முன்பு ஆள் இல்லாத ரயில்வே கேட்டில் லாரி மீது ரயில் மோதி 2 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications