நித்யானந்தாவை கைது செய்ய ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்
ஸ்ரீபெரும்புதூர்: இரு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நித்யானந்தாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு பிரச்சனையில் சிக்கிய நித்யானந்தா தலைமறைவாகி விட்டார். இந் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வமணி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், காவி உடை அணிந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு மீது கடந்த மாதம் 12ம் தேதி நீதிபதி குணசேகர் விசாரணை நடத்தினார். அப்போது, ஏப்ரல் 2ம் தேதி விசாரணைக்கு நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சம்மன் அனுப்பினார்.
ஏப்ரல் 2ம் தேதி விடுமுறை நாளாக இருந்ததால், இந்த வழக்கு விசாரணை 5ம் தேதி நடந்தது. அப்போது, வரும் 19ம் தேதி விசாரணைக்கு நித்யானந்தா ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
19ம் தேதியான நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் நித்யானந்தா ஆஜராகவில்லை.
இதையடுத்து நித்யானந்தாவை கைது செய்து, வரும் மே மாதம் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பெங்களூருக்கு வெளியே ராம்நகர் மாவட்டத்தில் தான் நித்யானந்தாவின் பிடுதி ஆசிரமம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நித்யானந்தாவுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா?:
இந் நிலையில் முன் ஜாமீன் மனு கோரி நித்யானந்தா தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ராம்நகர் நீதிமன்றம் இன்று பிறப்பிக்கவுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி நித்யானந்தா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் கர்நாடக போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் தன் மீதான புகார்களில் உண்மையில்லை எனக்கூறி தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் நித்யானந்தாவின் முன் ஜாமீன் மனு ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஹுங்குண்ட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு மீதான இறுதி உத்தரவை இன்று பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதனிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications