என் மீதான புகார்களை முழுமையாக விசாரிக்க வேண்டும்-சசி தரூர்

கொச்சி அணி ஏல விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரையடுத்து மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சசி தரூர், இன்று மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்து தன்னிலை விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், ஐபிஎல் அணி ஏல விவகாரத்தில் நான் சட்ட விரோதமாக எந்தச் செயலையும் செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நான் நடந்து கொள்ளவில்லை.
என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முழு விசாரணை நடத்த வேண்டும். அதன்மூலம் நான் குற்றமற்றவன் என்பது நிரூபணமாகும்.
என் மனசாட்சி சுத்தமாக உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சோனியா காந்தியின் உத்தரவுப்படி நான் அமைச்சராக பணி புரிந்தது மிக மகி்ழ்ச்சியாக இருந்தது. அதை என் வாழ்வின் மிகப் பெரிய பெருமையாகக் கருதுகிறேன். அந்த வாய்ப்பைத் தந்த இருவருக்கும் என நன்றிகள்.
தாய் நாட்டுக்காக தொடர்ந்து என் பணிகளை செய்வேன். என்னை மக்களவை எம்பியாக்கிய கேரள மாநிலத்துக்கு நன்றி.
எனக்கு அரசியல் புதிது. என் அரசியல் வாழ்க்கை தொடரும், அதில் நீண்ட பயணம் மிச்சமுள்ளது.
இத்துடன் இந்த விவகாரத்தை முடித்துவிட்டு நாடாளுமன்றம் இனி நாட்டின் முக்கியப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன் என்றார் தரூர்.
முன்னதாக நேற்று மத்திய நிதியமைச்சரும், மக்களவை முன்னவருமான பிரணாப் முகர்ஜியை, சசி தரூர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவண் குமார் பன்சாலும் உடனிருந்தார். அப்போது, இந்த சர்ச்சை குறித்து தன்னிலை விளக்கம் தர சசி தரூர் அனுமதி கோரினார். இதை காங்கிரஸ் அனுமதித்ததையடுத்து இன்று விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications