புதுச்சேரி சட்டசபையில் அதிமுகவினர் வெளியேற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக கேள்வி நேரத்துக்குப் பின் பேசிய அதிமுக எம்எல்ஏ அன்பழகன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை. அதற்கான நிதியை வேறு திட்டங்களுக்கு அரசு பயன்படுத்தியுள்ளது என்றார்.
இதற்கு முதல்வர் வைத்திலிங்கம் பதிலளித்தார்.
ஆனால் முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி அன்பழகன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் ஓம்சக்தி சேகர், ஓமலிங்கம் ஆகியோர் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் இருக்கை முன்பு சென்று அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை அங்கிருந்து எழுந்து செல்லுமாறு சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் அவர்கள் காதில் வாங்காமல் கோஷம் போட்டபடி இருந்தனர்.
இதையடுத்து அவர்களை சபையில் இருந்து வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து காவலர்கள அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றினர்.