சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களின் 'வாடா போடா' பேச்சு: சபாநாயகர் எச்சரிக்கை

சட்டசபையில் இன்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்த அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நடந்த விவாதம்:
அமைச்சர் பரிதி இளம்வழுதி (குறுக்கிட்டு): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நான் ஏற்கனவே ஒரு உரிமை மீறல் பிரச்சனை கொடுத்து இருந்தேன் அது என்ன ஆனது?.
செங்கோட்டையன் (கடும் எதிர்ப்பு தெரிவித்தபடி): நான் பேசுவது வேறு சப்ஜெக்ட். இடையில் இவர் பேசுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அப்போது செங்கோட்டையனுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் கும்பலாக எழுந்து நின்று கூச்சல் போட்டனர்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: நீங்கள் பேசுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நான் பேச எனக்கு உரிமை இருக்கிறது.
அப்போது செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், சிலர் 'வாடா போடா' என்று பரிதியை நோக்கி ஒருமையில் கத்தினர்.
சபாநாயகர் ஆவுடையப்பன்: வாடா போடா என்று பேசும் செ.ம.வேலுச்சாமியை எச்சரிக்கிறேன். இப்படி பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.
பரிதி இளம்வழுதி: எதிர்க்கட்சி வரிசையில் வாடா போடா என ஆபாச பாணியில் கையை நீட்டி பேசுகிறார்கள். இதை எப்படி அனுமதிக்கிறீர்கள். இதேபோன்று அன்றைக்கு அமைச்சரை பார்த்து வாடா வெளியே என்று கூறுகிறார் ஒரு உறுப்பினர். இவ்வாறு பேசாமல் இருக்க சபாநாயகர் தீர்வு காண வேண்டும். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது 'போடா' என்று அதிமுக தரப்பில் இருந்து சத்தம் வந்தது.
சபாநாயகர்: அதிமுக உறுப்பினர் ஆர்.சின்னசாமி உங்களை எச்சரிக்கிறேன். ஒளிந்து கொண்டு பேசினால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். இப்படி ஒருமையில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications