விபச்சாரம்: கன்னட பிரசாத் கூட்டாளிகள் கைது-7 பெண்கள் மீட்பு
சென்னை: சென்னையில் வெளி மாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய கன்னட பிரசாத்தின் 4 கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு 7 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் புரோக்கராக, போலீசுக்கு தண்ணி காட்டி வந்தவர் கன்னட பிரசாத்.
பிரபல நடிகைகள் தொடங்கி, துணை நடிகைகள் வரை தனது விபச்சாரத் தொழிலுக்குப் பயன்படுத்தி வந்தார்.
முதல்முறையாக கடந்த 2002ம் ஆண்டு போலீசில் சிக்கினார் கன்னட பிரசாத். குண்டர் சட்டத்தில் ஓராண்டு அடைக்கப்பட்டார்.
பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், தலைமறைவாக இருந்தபடி, மீண்டும் இதே தொழிலை நடத்தியதால் 2007ம் ஆண்டு மீண்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
2008ம் ஆண்டு வெளியே வந்த அவர் 2009ம் ஆண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் அவரது கூட்டாளிகள் அவரது 'தொழிலை' தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இப்போது இந்த கூட்டாளிகளி்ல் 4 பேர் கைது செய்யப்பட்டு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை முகலிவாக்கம் மகானந்தபுரம் வி.ஜி.என். நகரில் உள்ள பங்களாவில் விபச்சாரம் நடப்பதை அறிந்து சென்னை புறநகர் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது விபச்சார உலகின் தாதாவான கன்னட பிரசாத்தி்ன் கூட்டாளிகள் 7 பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக கன்னட பிரசாத்தின் கூட்டாளிகளான சரவணன், சதீஷ், குமார், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்களான ரெஜினா, சோனியா ராய், ரேஷ்மா, நர்கிஸ், ஜோஸ்னா, அன்வாரா, பெங்களூரைச் சேர்ந்த காவ்யா ஆகியோர் மீட்கப்பட்டனர்.
விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான சரவணன் மீது சென்னை ஏ.வி.எஸ். நகர், மடிப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் விபச்சார வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக 2007ம் ஆண்டில் இவன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டான்.
அதேபோல சதீஷ், குமார் ஆகியோர் மீதும் பல விபச்சார வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.