விலைவாசி உயர்வு: நாடாளுமன்றத்தில் பாஜக வெளிநட்ப்பு டெல்லியில் பிரமாண்ட பேரணி
டெல்லி: விலைவாசி உயர்வைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து லோக்சபாவில் இன்று பாஜக வெளிநடப்பு செய்த்து. இதையடுத்து டெல்லியில் நடந்த பிரமாண்டப் பேரணியில் பாஜக எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
இன்று காலை லோக்சபாவில் பாஜக உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து பிரச்சினையைக் கிளப்பினர். கட்சியின் தலைவர் சுஷ்மா சுவராஜ் படு ஆவேசமாக பேசினார். பின்னர் விலைவாசி உயர்வைக் கட்டுபடுத்துத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், இதுதொடர்பாக டெல்லியில் நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வெளிநடப்பு செய்வதாக அவர் அறிவித்தார்.
இதையடுத்து பாஜக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறினர். பின்னர் ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் உசேன் கூறுகையில், போராட்டத்தில் பங்கேற்பதை முக்கியமாக கருதுகிறோம். இதனால்தான் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து விட்டு அதில் பங்கேற்றுள்ளனர் பாஜக எம்.பிக்கள் என்றார்.
லட்சக்கணக்கான பாஜகவினர் ராம் லீலா மைதானத்தில் குவிந்திருப்பதால் மதுரா சாலை, நாடாளுமன்றச் சாலை உள்ளிட்ட பல முக்கியச் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் பெருமளவில் டெல்லியில் குவிந்துள்ளனர்.
பாஜக தலைவராக நிதின் கத்காரி பதவியேற்ற பின்னர் பாஜக நடத்தும் மிகப் பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி. மறைவு-ராஜ்யசபா நாளை வரை ஒத்திவைப்பு:
இந் நிலையில் பாஜகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. கிரிஷன் லால் பால்மிகி இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 67. அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராஜ்யசபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.