பிரபாகரன் தாயார் பற்றி பேச சு.சாமிக்கு அருகதையில்லை: திருமாவளவன்
சென்னை: புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பற்றி பேச சுப்பிரமணியம் சாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் வந்த பிரபாகரன் தாயார் திருமதி பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்தும், இந்தியா வருவதற்கு அவர் மீதான இந்தியை அரசின் தடையை நீக்கக் கோரியும் இன்று காலை 11 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் கடந்த 16ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை இந்திய குடியுரிமை அதிகாரிகள் விமானத்தை விட்டு கீழே இறங்க விடாமல் திருப்பி அனுப்பி விட்டனர். அவர் திருப்பி அனுப்பப்படுவதற்கு 2003ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை ஆணைதான் காரணம்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாள் திருச்சியில் தங்கி இருந்தார்கள். 2002ம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள். அது போல திருச்சியில் தங்கி இருந்த பிரபாகரனின் பெற்றோர்களும் யாழ்ப்பாணம் சென்றார்கள்.
அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா பிரபாகரனின் பெற்றோர் திரும்பி வராமல் இருக்க மத்திய அரசிடம் விண்ணப்பித்தார். வார்னிங் சர்க்குலர் என்ற அடிப்படையில் அவர்கள் தமிழகத்திற்கு திரும்ப வராமல் இருக்க தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கணவனை இழந்து நோயில் அவதிப்பட்டு வரும் பார்வதி அம்மையாருக்கு மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும்.
இந்த பிரச்சனை சட்ட மன்றத்தில் எழுப்பப்பட்ட போது முதல்வர் கருணாநிதி, பார்வதி அம்மாள் மீண்டும் தமிழகம் வந்து சிகிச்சை பெற விரும்பினால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சிகிச்சை பெற இந்திய அரசு பிறப்பித்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். தடை ஆணையை திரும்ப பெற முதல்வர் கடிதம் எழுத வேண்டும்.
தமிழ் ஈழத்தைப் பற்றி பேசவோ, விடுதலைப் புலிகளைப் பற்றி பேசவோ, திருமதி பார்வதி அம்மாள் அவர்களைப் பற்றி பேசவோ, விடுதலைச் சிறுத்தைகள் பற்றி பேசவோ சுப்பிரமணிய சாமி போன்றவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார் திருமா.