எதிர்க்கட்சிகள் கருத்தை கேட்டு நடக்க வேண்டும்-கருணாநிதிக்கு ஜெயலலிதா 'அட்வைஸ்'!
சென்னை: முல்லைப் பெரியாறு போன்ற முக்கியமான ஜீவாதாரப் பிரச்சனைகளில் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை குறித்து ஐவர் குழு ஒன்றினை அமைத்து உச்சநீதிமன்ற பெஞ்ச் கடந்த 18.2.2010 அன்று ஆணையிட்டபோது, இந்த குழுவில் தமிழகம் இடம் பெறாது என்று திமுக பொதுக் குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டு, அதன்படி தமிழகத்ததின் சார்பில் பிரதிநிதி நியமிக்கப்படவில்லை.
திமுக பொதுக் குழுவில் தீர்மானம் இயற்றப்பட்ட உடனேயே, தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தின் சார்பாக பிரதிநிதி இடம் பெறவில்லை என்றால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான கேரள அரசின் சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக ஆகிவிடும் என்றும்,
மேலும் தமிழக அரசின் கருத்துக்களை பிரதிபலிக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகிவிடும் என்றும் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் தமிழகத்தின் சார்பில் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது அறிக்கை வாயிலாக திமுக அரசை நான் கேட்டுக் கொண்டேன்.
எனது அறிக்கையில் உள்ள உண்மை நிலையை உணராமல், புரிந்து கொள்ளாமல், விமர்சனம் செய்து பதில் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி.
எனது கருத்தை ஏற்பது என்பது கருணாநிரிக்கு கெளரவப் பிரச்சனையாக இருந்திருந்தால் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதற்கு ஏற்றவாறு முடிவெடுத்து இருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை.
எனது அறிக்கைக்கு மதிப்பளித்து, ஐவர் குழுவில் தமிழகத்தின் சார்பில் ஓர் உறுப்பினர் அன்றைக்கே நியமித்திருந்தால் குழுவின் விசாரணை தற்போது துவங்கி இருக்கும்.
திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 8.3.2010 அன்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமனறத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி தமிழகத்தின் சார்பில் பிரதிநிதியை நியமனம் செய்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் கருணாநிதி ஓர் அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் சமர்ப்பித்துள்ளார்.
இனி வரும் காலங்களிலாவது இதுபோன்ற முக்கியமான ஜீவாதாரப் பிரச்சனைகளில் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.