பாளை சிறையில் செல்போனில் பேசுவதை தடுக்க டிடெக்டர்கள் பொருத்த முடிவு
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் செல்போனில் பேசுவதை தடுக்க நவீன செல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் சிறைகளில் கைதிகள் கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களை நவீன யுத்தி மூலம் கடத்தி வருகின்றனர். செருப்புகள் மறைத்தும், திண்பண்டங்களுக்குள் மறைத்தும் கடத்தி செல்கிறார்கள்.
சென்னை, புழல், திருச்சி, மதுரை சிறைகளில் கிரிக்கெட் பந்துக்குள் போதை பொருளை மறைத்து வைத்து ஜெயில் மதில் சுவர் வழியாக உள்ளே வீசுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சதாரணமாக கடத்தப்படுகின்றன.
கைதிகளிடையே செல்போன்களும் தாராளமாக புழங்குகின்றன. சிறை அதிகாரிகள் தலைமையில் அடிக்கடி சோதனை நடத்தி செல்போன், சிம்கார்டு, சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுகிறது. சிறை காவலர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருப்பதால்தான் செல்போன்களை எளிதாக உள்ளே கொண்டு செல்ல முடிகிறது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கமண்டோ படையினரும் கைதிகள் அறையில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனால் கைதிகளுக்கும், சிறை காவலர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. எனவே கைதிகள் செல்போனில் பேசுவதை தடுக்க செல் டிடேக்டர் என்ற நவீன கருவியை முக்கிய சிறைகளில் பொருத்த சிறை துறை ஏடிஜிபி ஷியாம் சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் விலை 1.5 லட்சமாகும். இதன் மூலம் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொருட்களை சோதனையிட ஸ்கேனர் கருவிகளும் வாங்கப்பட உள்ளது. ஒரு ஸ்கேனர் கருவியின் விலை ரூ.18 லட்சமாகும்.
கைதிகள் செல்போனில் பேசுவதை கண்டுபிடிக்கும் செல் டிடேக்டர் என்ற கருவி பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் கைதிகள் செல்போனில் பேசுவதை கண்டுபிடித்து விடலாம். சுமார் 100 அடி தூரத்திற்குள் செல்வைத்து பேசினால் செல் டிடேக்டர் கருவியின் சிக்னலில் எந்த கைதி செல் வைத்துள்ளார் என்பது தெரிந்து விடும்.