For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் தனியாருடன் இணைந்து வீடுகள் கட்ட அரசு திட்டம்!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வீட்டு வசதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் 100 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் உரிமையாளர்களுடன் இணைந்து வீட்டு மனை மற்றும் வீடுகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

இதற்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் சுப. தங்கவேலன் பேசுகையில்,

சென்னையில் திருமங்கலம், செனாய் நகர் பகுதிகளில் உள்ள பழைய தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளை இடித்து விட்டு மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள 446 வீடுகளும் மீண்டும் கட்டப்படும்.

இங்கு, பொது மக்களுக்காக வீடுகள் கட்டுவதுடன் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகளின் மொத்த எண்ணிக்கை 892 ஆக உயர்த்தப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.180.43 கோடியாக இருக்கும்.

கோவை மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த அரசு அலுவலர்களுக்கான வாடகை குடியிருப்பு வீடுகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படும். ரேஸ்கோர்ஸ் காலனி, மாவட்ட வன அலுவலர் வளாகம், கண்காணிப்புப் பொறியாளர், காவல் துறை கண்காணிப்பாளர் வளாகம், கவுண்டம்பாளையம், காந்திபுரம், உப்பிலிபாளையம், சீர நாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள வீடுகள் இடித்து புதிதாகக் கட்டப்படும்.

இதில் கட்டப்படும் கூடுதல் வீடுகளும் பொது மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.

பின்னர் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் பொறுப்பில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு துறை தொடர்பான அறிவிப்புகளையும் சுப. தங்கவேலன் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வில்லிவாக்கம், வேளச்சேரி, அம்பத்தூர், நசரத்பேட்டை, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு விரிவான வளர்ச்சி த்திட்டம் தயாரிக்கும் பணி நடப்பு ஆண்டில் எடுத்துக் கொள்ளப்படும்.

சென்னை பெருநகர பகுதியில் பெருகி வரும் வீட்டு வசதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் 100 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் உரிமையாளர்களுடன் இணைந்து வீட்டு மனை மற்றும் வீடுகளை உருவாக்கும் திட்டம் வரும் காலங்களில் செயல்படுத்தப்படும்.

கோயம்பேடு சொகுசு பஸ் நிலையத்தில் மேல் தளங்களை வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தவும் மற்றும் பல்வேறு வசதிகளை பொதுத்துறை-தனியார் பங்களிப்பு மூலம் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீலாங்கரை முதல் புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள பகுதிகளில் கட்டிட திட்ட அனுமதி, மனை பிரிவுகளுக்கான அனுமதிகளை வழங்கவும் பல்வேறு திட்டங்களை தயாரிக்கவும், தனியாக ஒரு மண்டல திட்ட குழுமம் அமைக்கப்படும்.

சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் 4 குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிகளுக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X