இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் குறித்து சர்வே!
சென்னை: இலங்கைக்கு செல்ல நினைக்கும் அகதிகள் குறித்து முகாம்களில் கியூ பிரிவு போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின் அகதிகள் பெருமளவில் இலங்கைக்கு திரும்பலாம் என எதிர்பார்த்தனர். அங்கு திரும்பி செல்லும் திட்டத்தை பெரும்பாலான அகதிகள் கைவிட்டுவிட்டனர்.
சிலர் அங்குள்ள சூழலை நேரில் அறிந்து வர இலங்கை செல்ல முயற்சித்தனர். ஆனால், போலீசாரின் அனுமதி கிடைக்காததால், ராமேஸ்வரத்திலிருந்து போலீசாருக்குத் தெரியாமல் படகுகளில் இலங்கை செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதில் பலரை படகோட்டிகள் நான்காம் தீடை தீவில் இறக்கிவிட்டு சென்றனர். இவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மீண்டும் முகாமில் தங்க வைத்து கண்காணிப்பு செய்து வருகின்றனர்.
இந் நிலையில் முகாம்களில் உள்ள அகதிகளில் யார் யார் இலங்கைக்கு திரும்ப ஆயத்தமாக இருக்கின்றனர் என்ற பட்டியலை, கியூ பிரிவு போலீசார் தயாரித்து வருகின்றனர்.