விமான நிலையம்-மாஜிஸ்திரேட் வீடு எதிரில் நித்யானந்தாவுக்கு அடி-செருப்பு வீச்சு!
விமான நிலையத்திலும் மாஜிஸ்திரேட் வீட்டு எதிரிலும் நித்யானந்தாவை சிலர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இமாச்சல் பிரதேசத்தில் இருந்து காரில் சண்டீகர் அழைத்து வரப்பட்ட நித்யானந்தா அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் அழைத்து வரப்பட்டார்.
அவருடன் இருந்த நித்ய பக்தானந்தா என்ற கோபால் சீலம் ரெட்டி, மிதா சனாதன் நந்தா, அர்பில் சங்கில், அருண் ராஜ் ஆகிய 4 சீடர்களும் கொண்டு வரப்பட்டனர்.
நித்யானந்தாவைக் காண விமான பயணிகள் ஆர்வம்:
நித்யானந்தா கொண்டு வரப்படுவதையொட்டி பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நித்யானந்தாவைக் காண ஏராளமானோர் முண்டியடித்ததால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் புடைசூழ, இரு கரங்களை கூப்பி வணக்கம் தெரிவித்தபடி, சிரிப்பை உதிர்த்தபடி வெளியே வந்த நித்யானந்தாவுக்கு எதிராக நுழைவு வாயிலில் குவிந்திருந்த பலர் எதிராக கோஷமிட்டனர்.
நித்யானந்தாவுக்கு அடி...
அதில் சிலர் போலீஸாரையும் மீறி நித்யானந்தாவைத் தாக்கினர். அவருக்கு முதுகில் அடி விழுந்தது. நிலைதடுமாறிய அவரை போலீசார் சிவப்பு விளக்கு சுழலும் அம்பாசிடர் காரில் ஏற்றி ராம்நருக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அரசு மருத்துவமனையில் தயாராக இருந்த 2 மருத்துவர்கள் நித்யானந்தாவுக்கு வழக்கமான உடல் தகுதி சோதனைகளை நடத்தினர்.
மருத்துவ சோதனை:
சிறுநீர், ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகளுடன் இரவு 10.30 மணிக்கு மாஜிஸ்திரேட் புஷ்பாவதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.
4 நாள் போலீஸ் காவல்:
அவரிடம் மாஜிஸ்திரேட் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். அப்போது போலீஸ் காவலில் எடுத்து அவரை விசாரிக்க அனுமதி கேட்டு சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்ற மாஜிஸ்திரேட் வரும் 26ம் தேதி வரை நித்யானந்தாவை சி.ஐ.டி. போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
செருப்பு வீச்சு:
இதையடுத்து மாஜிஸ்திரேட் வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட நித்யானந்தாவை ஒருவர் திடீரென தாக்கினார். செருப்பும் வீசினார்.
நித்யானந்தாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி தாக்கிய அந்த நபரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர் ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சி.ஐ.டி. போலீஸ் எஸ்பி யோகப்பா தனது பொறுப்பில் நித்யானந்தாவை விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்-சென்னை போலீஸ்:
இந் நிலையில் நித்யானந்தாவிடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் கொடுத்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நித்யானந்தா மீது கற்பழிப்பு மற்றும் கொலைமிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்குகள் எல்லாம் பெங்களூர் போலீசுக்கு மாற்றப்பட்டுவிட்டன.
இந்த வழக்குகளின் அடிப்படையில்தான் பெங்களூர் போலீசார் நித்யானந்தாவை கைது செய்துள்ளனர்.
ஆசிரமத்தில் நித்யானந்தா:
இந் நிலையில் நித்யானந்தாவை இன்று அவரது பிடுதி ஆசிரமத்துக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்யானந்தா பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications