சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 5 சாட்சிகள் பல்டி'
புதுச்சேரி: காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகியும், சங்கர மடத்தின் மேலாளராளருமான சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில் மேலும் 5 சாட்சிகள் பல்டி அடித்துள்ளனர்.
இந்தக் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. தற்போது சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ஜெயேந்திருக்கு எதிராக 370 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இதுவரை 83 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. அவர்களில் 40 பேர் போலீசார் வற்புறுத்தலின் பேரிலேயே ஜெயந்திரருக்கு எதிராக சாட்சி அளித்ததாக பல்டி அடித்துவிட்டனர்.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 7 பேர் ஆஜராயினர். ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 17 பேர் ஆஜராகவில்லை.
சங்கரராமனின் உறவினர் ராமமூர்த்தி, வட்டிக்கடைகாரர் ஹரிஸ்குமார், ராஜா, சமையல் வேலை செய்யும் கோபி, சுப்பிரமணியன் என்ற தாம்பரம் பிரபு, சி.டி. கடை உரிமையாளர் லட்சுமணன், வட்டார போக்குவரத்துதுறை இளநிலை உதவியாளராக இருந்த பாலாஜி, உதவியாளர் மைதிலி, இளநிலை உதவியாளராக இருந்து ஓய்வு பெற்ற சையது முகமது, ஹோட்டல் நடத்தும் ராஜசேகர், வெங்கடேச ரெட்டியார் ஆகிய 11 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.
அப்போது ராமமூர்த்தி, ராஜா, கோபி, சுப்பிரமணியன் என்ற தாம்பரம் பிரபு, வெங்கடேச ரெட்டியார் ஆகிய 5 பேரும் ஏற்கனவே தாங்கள் அளித்த சாட்சியங்கள் போலீசாரின் நிர்பந்தத்தின் பேரில் அளிக்கப்பட்டது எனவும் எங்களுக்கு கொலை தொடர்பாக எதுவும் தெரியாது என்று கூறி பல்டி அடித்துவிட்டனர்.
இந் நிலையில் இன்று 13 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications