பவார் மருமகன் பங்கு வைத்துள்ள நிறுவனத்திடமிருந்து ரூ. 125 கோடி லஞ்சம் வாங்கினோம் – டபிள்யூஎஸ்ஜி

ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்ப வோர்ல்டு ஸ்போர்ட்ஸ் குரூப், மல்டி ஸ்கிரீன் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ரூ.8225 கோடிக்கு அவர்கள் ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் மத்திய அமைச்சர் சரத்பவாரின் மருமகன் சதானந்த் சுலே 10 சதவித பங்கு வைத்து இருப்பது தெரிய வந்தது.
இரு ஒளிபரப்பு நிறுவனங்களிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் பல்வேறு முறைகேடு ஆதாரங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
ஒளிபரப்பு உரிமம் பெற்ற இரு நிறுவனங்களும் தங்களுக்குள் சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தி கொண்டன. இதற்காக மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்திடம் இருந்து வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவனம் ரூ.125 கோடி லஞ்சம் பெற்றதாகவும் இதை அந்த நிறுவனமே வருமானவரி அதிகாரிகளிடம் ஒத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வோர்ல்டு ஸ்போர்ட்ஸ் குரூப் நிறுவன தலைவர் வேணுநாயரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவர் இந்த தகவலை கூறினார் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தாங்கள் வாங்கிய லஞ்சப் பணத்தை பலருக்கும் பகிர்ந்து கொடுத்ததாகவும் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளதாம். இவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கலாம் என வருமான வரித்துறை சந்தேகப்படுகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது லஞ்சம் வாங்கியது உண்மைதான் என்று கூறிய வேணு நாயர் ஒரு கட்டத்தில் அழுது விட்டாராம்.
சோனி நிறுவனம் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரிட்டிஷ் விர்ஜின் ஐலண்ட்ஸுக்கு வருமான வரித்துறையினரின் கவனம் திரும்பியுள்ளது. லஞ்சமாக பெறப்பட்ட பணம் பார்க் ஹவுஸ் ஹோல்டிங் என்ற பெயரில்தான் பணம் வைப்பு செய்யப்பட்டிருப்பதாக வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளது. பார்க் ஹவுஸ் ஹோல்டிங் நிறுவனம் பிரிட்டிஷ் விர்ஜின் ஐலண்ட்ஸில் பதிவு செய்யப்பட்டதாகும்.
ஆனால் டபிள்யூஎஸ்ஜி நிறுவனத்தின் நிறுவனரான சீமஸ் ஓ பிரையன் என்பவரின் பெயரில் வங்கிக் கணக்கில் இடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும், மொரீஷியஸில் உள்ள வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைப்படி ஓபிரையன் கணக்கில் பணத்தை சேர்த்துள்ளனராம்.
மேலும் சமீபத்திய வருமான வரித்துறை ரெய்டின்போது சிங்கப்பூர் கணக்கு ஒன்றுக்கான ஆதாரமும் சிக்கியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது பல கட்டங்களாக பணம் கைமாறி கடைசியில் பிரிட்டிஷ் விர்ஜின் ஐலண்ட்ஸுக்கு அது போய்ச் சேர்ந்திருப்பதாக கருதப்படுகிறது.
இதையடுத்து ஐபிஎல் ஊழல் விவகாரம் மேலும் சூடு பிடிக்கும் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications