ரூ.50,000 அபராதம்-ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கிராம பஞ்சாயத்து கும்பலால் ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்ட நபர் தனது மனைவி, மகன், மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.
ராஜஸ்தான் மாநிலம் கராவ்லி மாவட்டத்தில் உள்ள பச்னாகுர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜு ஜாட். இவரது மனைவி ஹீரா தேவி, மகன் ரோஜித், மகள் சன்சல்.
கஜு ஜாட்டுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கன்வர் தேவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதாக கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து கஜு ஜாட் உடனே ரூ. 50,000 அபராதம் கட்ட வேண்டும், இல்லாவிட்டால் உடனடியாக ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்று பஞ்சாயத்து உத்தரவிட்டது.
இதனால் மனமுடைந்த கஜு ஜாட் தனது மனைவி, மகன், மகள் மற்றும் அண்டை வீட்டுப் பெண் கன்வர் தேவி ஆகியோருடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்தார்.
இதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே 5 பேரும் உடல் சிதறி பலியாயினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தலைமறைவாகிவிட்டனர்.