ரூ 71,874 கோடி வரி பாக்கி வைத்திருக்கும் புனே தொழிலதிபர்! - அம்பலப்படுத்திய சிஏஜி
டெல்லி: சம்பளதாரர்கள் வெறும் 100 ரூபாய் வரி பாக்கி வைத்தால் கூட நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பி நோகடிக்கும் இந்திய வருமான வரித்துறை, ரூ 71,874 கோடி வரி பாக்கி வைத்திருக்கும் ஒரு தொழிலதிபரை ஒன்றும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த உண்மையை 'கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டிங் ஜெனரல்' (CAG) எனப்படும் இந்திய தலைமைக் கணக்குத் துறை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
அதுமட்டுமல்ல, கடந்த நிதியாண்டில் மட்டும் வசூலிக்கப்படாமல் உள்ள வருமான வரியின் அளவு ரூ 2 லட்சம் கோடி என்றும் அறிவித்துள்ளது. 2008-2009-ம் ஆண்டில் வசூலிக்கப்பட்டதை விட 65 சதவிகிதம் குறைவாகவே வருமான வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த வரிபாக்கி முழுவதுமாக வசூல் செய்யப்பட்டால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையில் மூன்றில் இரண்டு பங்கு சரிகட்டப்பட்டு விடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மட்டும் ரூ 71,874 கோடி பாக்கி வைத்துள்ளார். அவர் பெயர் ஹஸன் அலி. இதே பெயரில் பண்ணை மற்றும் பல தொழில்களை நடத்துபவர். இவரிடம் வரி வசூலிக்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தலைமைக் கணக்குத் துறை கேள்வி எழுப்பியுள்ளது.