ஐபிஎல் விருது விழா- புறக்கணித்த பிசிசிஐ- கண்டு கொள்ளாத மோடி அன் கோ
மும்பை: மும்பையில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் விருது வழங்கும் விழாவை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஆனால் இதுகுறித்து லலித் மோடி அன் கோவினர் சற்றும் கவலைப்படவில்லை. மாறாக படு கோலாகலமாக விழாவில் கலந்து கொண்டனர்.
ஐபிஎல் வுதுகள் வழங்கும் விழா நேற்று இரவு மும்பையில் படு கோலாகலாமாக நடந்தது. திரையுலக கனவுக் கன்னிகள் பலர் படு கலக்கலாக விழாவில் கலந்து கொண்டனர்.
சமீரா ரெட்டி, ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் படு கவர்ச்சிகரமாக வந்திருந்தனர். இவர்களில் ஷில்பாவும், ப்ரீத்தியும் ஐபிஎல் அணிகளின் இணை உரிமையாளர்களும் கூட. இவர்களுடன் மோடி படு கேஷுவலாக காணப்பட்டார்.
விழாவை ஷாருக் கானும், கரண் ஜோஹரும் தொகுத்து வழங்கினர்.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் விழாவைப் புறக்கணித்து விட்டனர். தலைவர் மனோகர், செயலாளர் சீனிவாசன், ஐபிஎல் துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா ஆகியோர் வரவில்லை.
அதேபோல 14 உறுப்பினர்களைக் கொண்ட ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவைச் சேர்ந்தவர்களில் கவாஸ்கரைத் தவிர மற்ற அனைவரும் வரவில்லை.
இருப்பினும் ஐபிஎல் அணி உரிமையாளர்களான விஜய் மல்லையா, ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா, காயத்ரி ரெட்டி, ஜெய் மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் புறக்கணிப்பால் விருது விழாவில் எந்த வித தொய்வும் இல்லை. மாறாக படு உற்சாகமாக அனைவரும் விழாவில் காணப்பட்டனர். குறிப்பாக மோடியிடம் உற்சாகம் தூக்குதலாக தெரிந்தது.