செல்போன் கைப்பற்றப்படவில்லை-நளினி மறுப்பு
வேலூர்: சிறையில் தனது அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலை நளினி மறுத்துள்ளார்.
இன்று சிறையல் அவரை சந்தித்துவிட்டு வந்த அவரது வழக்கறிஞர் இதை நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும்
செல்போனில் யாரிடமும் தான் பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நளினியின் செல்போனுக்கான சிம் கார்ட் வாங்கித் தந்ததாக கட்டட மேஸ்திரி ஒருவரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது நளினியிடமிருந்கு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த செல்போனுக்கான சிம் கார்ட், காட்பாடி கனகசமுத்திரத்தை சேர்ந்த ரவி என்பவரின் பெயரில் உள்ளது.
இதனையடுத்து கட்டிட மேஸ்திரியான ரவியிடம் கியூ பிராஞ் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதை ரவியே நளி்க்கு வாங்கித் தந்தாரா அல்லது ரவியின் முகவரி சான்றிதழ் மோசடியாக பயன்படுத்தபட்டு அந்த சிம் கார்ட் வாங்கப்பட்டதா என்று தெரியவில்லை.
நளினியிடம் தந்தது கணவர் முருகன்?:
இதற்கிடையே நளினியை சிறையில் வெளியாட்கள் தொடர்பு கொள்வது இல்லை என்பதாலும் அவரது கணவர் முருகன மட்டுமே 15 நாட்களுக்கு ஒருமுறை சிறையில் நளினியை தனியே சந்தித்து வருகிறார் என்பதாலும் அவர் மூலமே நளினிக்கு செல்போன் வழங்கபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாரிடம் எழுந்துள்ளது.
முருகன் அடைபட்டுள்ள வேலூர் ஆண்கள் ஜெயிலில் செல்போன் புழக்கம் அதிகம் உண்டு. அங்கு கடந்த வாரம் நடந்த சோதனையில் மட்டும் 11 செல்போன்கள் கைபற்றபட்டுள்ளன.
மேலும் முருகனைக் காண வெளியாட்கள் அதிகளவில் வருவதுண்டு என்பதால் அவர் மூலம் தான் நளினிக்கு செல்போன் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்று நளினி-முருகன் சந்திப்பு:
இந் நிலையில் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை வேலூர் பெண்கள் சிறையில் நளினியை, முருகன் சந்தித்துப் பேசினார்.
நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினி-முருகன் சந்தித்து பேச அனுமதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சந்திப்பு நடந்தது.
டி.ஸ்.பி. கருணாகரன் ஆண்கள் ஜெயிலில் இருந்து பெண்கள் ஜெயிலுக்கு முருகனை அழைத்துச் சென்றார். முன்னதாக முருகனை போலீசார் பலத்த சோதனையிட்டனர்.
பின்னர் நளினி-முருகன் இருவரும் தனியாக சந்தித்து பேசினார். இதையடுத்து நளினியை அவரது வழக்கறிஞரும் சந்தித்துப் பேசினார்.