நெல்லையில் இன்று யாதவ மகாசபை மாநில மாநாடு
நெல்லை: நெல்லையில் இன்று யாதவ மகாசபை மாநில மாநாடு மற்றும் வீரன் அழகுமுத்துகோன் சிலை திறப்பு விழா நடக்கிறது.
நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் இன்று வீரன் அழகுமுத்துகோன் சிலை திறப்பு விழா மற்றும் ஆயர்குல யாதவ மகாசபை மாநில மாநாடு நடக்கிறது. காலையில் மாநாட்டு பந்தல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மாநாட்டு மேடை மற்றும் கொடி ஏற்றப்பட்டு மாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, லட்சிய திமுக டிராஜேந்தர், இந்திய தொழிற்சங்க தலைவர் பாஸ்கரன், பசுபதிபாண்டியன், சேதுராமன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
மாலை 6 மணிக்கு வீரன் அழகுமுத்துகோன் சிலை திறப்பு விழா நடக்கிறது. தொடர்ந்து யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் சிறப்புரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டில் காலை முதல் இரவு வரை கலைநிகழ்ச்சிகள், சிறப்பு கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாதவ சமுதாயத்தினருக்கு அனைத்து கட்சிகளும் குறைந்தபட்சம் 25 இடங்களை ஓதுக்க வேண்டும். யாதவ சமுதாயத்தினரையும் எம்பி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படுகின்றன.
யாதவ மகாசபை மாநில மாநாட்டிற்கு நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் கோட்டை போன்ற நுழைவுவாயில் அலங்காரத்துடன் பிரம்மண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் வசதி, இருக்கை வசதி, மருத்துவ முகாம் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வரும் மக்களுக்கு விஎம் சத்திரம், பாளை புது பஸ் ஸ்டாண்ட், நெல்லை டவுன் சாலியர் தெரு உள்பட பல்வேறு இடங்களி்ல் உணவு வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டை ஓட்டி நெல்லை டவுன், ஜங்ஷன் மற்றும் சுற்று பகுதிகளில் ஏராளமான டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டை முன்னிட்டு நெல்லை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications