'பந்த்': ஆதரவு கொடுங்கள்- தா.பாண்டியன் வேண்டுகோள்
சென்னை: நாளை நடக்கவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் மக்கள் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களின் விலைவாசி 18 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
மத்திய- மாநில அரசுகள் மக்களை வாட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழியையும் பறித்தது என்பது போல் எரிபொருட்கள் மீது வரியை போட்டு அனைத்துப் பொருட்களின் விலையையும் ஏற்றுவதற்கு அரசே வழிவகை செய்திருக்கிறது.
என்றும் கண்டிராத மின்வெட்டு, மக்களின் சகலதுறை வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது. தண்ணீர் நெருக்கடி முற்றிவருகிறது.
லஞ்ச-ஊழல்கள் பற்றிய செய்திகள் நாடு வேட்டைக் காடாக மாற்றப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தத் அரசின் கொள்கைகளை கண்டித்து நாளை அமைதி வழியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த இடதுசாரி, ஜனநாயக கட்சிகள் கூட்டாக அறைகூவல் விட்டுள்ளன.
மத்திய அரசின் கொள்கைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள 4 கோடி குடும்பங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்குதலுக்கும், முன்பேரவர்த்தக சூதாட்டத்தாலும் வாழ்வாதாரத்தையே இழக்க நேரிடும் அபாயம் தோன்றியுள்ளது.
உழைப்புக்கும் உற்பத்திக்கும் அரசின் கொள்கைகளால் இழப்பே வளர்ந்து வருகிறது. எவ்விதத் தடையுமின்றி லஞ்ச- ஊழல் பல்லாயிரம் கோடிகளில் பவனி வருவது தெரிகிறது. எனவே இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தவும், போராடிப் பெற்ற இந்திய சுதந்திரத்தை பாதுகாக்கவும், மக்களின் வாழ்வுரிமையைக் காத்திடவும்,
அமைதியான வழியில் நாளை ஒவ்வொரு குடி மகனும் வேலைமறுப்புச் செய்து மக்களின் கண்டனத்தை தெரிவிக்க அனைவரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மக்கள் ஆதரவு கிடைக்காது-காங்:
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கோவையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை பொறுக்க முடியாத கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்த நாளை பந்த் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடத்தாமல் எதிர்க்கட்சிகள் இந்த பந்தை அறிவித்துள்ளனர். நாளை நடக்கவுள்ள இந்த பந்திற்கு மக்களிடம் இருந்து ஆதரவு கிடைக்காது என்றார்.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியது குறித்து கேட்டதற்கு, பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை மத்திய அரசிடம் கோரவில்லை. அவ்வாறு கோரிக்கை விடப்பட்டிருந்தால் மனிதாபிமான அடிப்படையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுத்திருப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications