தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க அரசு உத்தரவிடவில்லை – ப.சிதம்பரம்

தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது.
இன்று காலை ராஜ்யசபா கூடியதும் தொலைபேசி ஒட்டுக் கேட்பு பிரச்சினையை எழுப்பினர் எதிர்க்கட்சியினர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
ஆனால் இதற்கு சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி அனுமதி அளிக்க மறுத்தார். மேலும் உறுப்பினர்கள் கேள்வி நேரம் நடக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் உறுப்பினர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபடவே அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோது மறுபடியும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.+
லோக்சபா 2 மணி வரை ஒத்திவைப்பு
இதேபோல லோக்சபாவிலும் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது.
காலை அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பி அமளியில் குதித்தனர்.
அவர்களை சபாநாயகர் மீரா குமார் அமைதிப்படுத்தி அத்வானியை பேச அழைத்தார்.
அத்வானி பேசுகையில், நாட்டில் எமர்ஜென்சி நிலை நிலவினாலோ அல்லது நாட்டு மக்களின் நலன் கருதியோ மட்டுமே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கும் கூட அது பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.
ஆனால் இன்று என்ன நடக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் நடந்த்தைப் போல இப்போது தொலைபேசி பேச்சுக்களை அரசு ஒட்டுக் கேட்கிறது. இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். வேறு யாருடைய விளக்கத்தையும் ஏற்க மாட்டோம்.
இந்த பிரச்சினையைத் தீர்க்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். மீண்டும் இந்த நாட்டில் எமர்ஜென்சி வருவதை அனுமதிக்க முடியாது. இதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தை தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து அமளியில் குதித்தனர். இதையடுத்து அவையை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மீண்டும் அவை 12 மணிக்குக்கூடியபோது, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் ஒன்றை அளித்தார்.
அவர் கூறுகையில், அரசியல் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்குமாறு அரசின் எந்தத் துறைக்கும் உத்தரவிடப்படவில்லை.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து அரசு விசாரித்து வருகிறது. ஏதாவது ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், இதுகுறித்து பிரதமர் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறார். இன்று மாலை 3 மணிக்கு அவர் தனது விளக்கத்தை அளிப்பார் என்றார்.
ஐஆனால் அவர்களின் பதில் திருப்தி தரவில்லை என்று கூறிய பாஜக உள்ளிட்ட உறுப்பினர்கள் அமளியைத் தொடரவே லோக்சபா பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications