புலிகளை வெல்ல உதவிய எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன்: இலங்கை
கொழும்பு: எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் ஆகியோர் அளித்த ஒத்துழைப்பே விடுதலைப் புலிகளை வெல்வதற்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபய கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
விடுதலைப் புலிகளை முறியடிக்க 4 ஜனாதிபதிகள் தலைமையில் அமைந்த 8 அரசுகள் முயன்றன. ஆனால் முடியவில்லை. ராஜபக்சே பதவி ஏற்றதும் இது பற்றி ஆராயப்பட்டது.
முடிவில் ராணுவத்தின் பலத்தை உயர்த்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பலன் கிடைத்தது. முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தில் கூடுதல் ராணுவ வீரர்களை நிலை நிறுத்தினோம்.
கிழக்கு மாகாணத்தில் தாங்கள் தோற்கடிக்கப்படவில்லை என்றும், தந்திரமாக பின் வாங்கி இருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறினார்கள்.
வடக்கில் திடீரென கடுமையாக தாக்குதல் நடத்தினால் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் படையை நாங்கள் வடக்கு பகுதிக்கு நகர்த்துவோம். அப்போது கிழக்கு மாகாணத்தை கைப்பற்றி விடலாம் என்று விடுதலைப் புலிகள் தவறாக கணித்தனர்.
மேலும் கிழக்கு மாகாணத்தை தக்க வைப்பதற்கு ராணுவத்திடம் போதுமான வீரர்கள் இல்லை என்று விடுதலைப் புலிகள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் படை வீரர்கள் எண்ணிக்கையை நாங்கள் கணிசமாக அதிகரித்திருந்தோம்.
ஒவ்வொரு மாதமும் தலா 5,000 பேரை படையில் சேர்த்தோம். இதனால் மூன்றே வருடங்களில் வீரர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 3 லட்சமானது.
இந்தியா உள்பட பல நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. போர் நடக்கும் சமயம் இந்தியா நெருக்கடி கொடுத்தது. அதை அதிபர் ராஜபக்சே சாதூரியமாக எதிர்கொண்டார். ராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவிடம் விளக்கப்பட்டன.
நான், பசில் ராஜபக்சே, வீரதுங்க மூவரும் இந்தியாவுடன் தினமும் பேசினோம். இந்திய அதிகாரிகளான எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் இருவரும் எங்களுக்கு ஒத்துழைத்தனர்.
முக்கிய விவகாரங்கள் எழுந்தபோதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். இதனால் இலங்கை ராணுவ தாக்குதல்கள் இடையூறு இல்லாமல் நடந்தன. இந்த ஒத்துழைப்பே விடுதலைப் புலிகளை வெல்வதற்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் கோதபய.
மன்மோகன் சிங்கை சந்திக்கும் ராஜபக்சே:
இந் நிலையில் நாளை பூடானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.
நாளை இந்த மாநாடு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற பின் ராஜபக்சே, வெளிநாட்டு தலைவர் ஒருவரை சந்திப்பது இதுவே முதல் முறை.
இதேபோல் ராஜபக்சே அடுத்த மாதம் இந்தியா வருவார் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications