பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்றிதழ் பெறும் முற்பட்ட வகுப்பினர்-கருணாநிதி எச்சரிக்கை

சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:
ஜி.கே.மணி (பாமக): வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு முழுமையாக வன்னியர்களுக்கு போய்ச் சேரவில்லை. 108 சாதிகள் உள்ள நிலையில் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஒட்டு மொத்த மாறுதலை ஏற்படுத்த வேண்டும்.
முதல்வர் கருணாநிதி (குறுக்கிட்டு):
இந்தப் பிரச்சனை இங்கு ஏற்கனவே எழுப்பப்பட்டு நான் விளக்கம் அளித்திருக்கிறேன். 108 சாதி என்று சொல்வது தவறு, பிழை உடையது. 108 சாதிகள் இருக்கலாம். ஆனால் வன்னியர் சாதியில் இருப்பதைப்போன்று, ஒவ்வொரு சாதியிலும் அவ்வளவு மக்கள் தொகை கிடையாது. அதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆயிரம் பேர் கொண்ட சாதிகள் கூட இருக்கின்றன.
அதை இந்த 108 சாதியிலே சேர்த்துக் கொண்டு, வன்னியர்களுடைய எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக சொல்வது தவறு. நீங்கள் கடந்த காலங்களில் இந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான, குறிப்பாக வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட சதவீத அறிவிப்புக்கு பிறகும், முன்பும் என்று நீங்கள் எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும்.
முன்பு மருத்துவக்கல்லூரியில் அல்லது பொறியியல் கல்லூரியில் வன்னிய சமுதாய மக்களுக்கு எவ்வளவு இடம் கிடைத்தது?. இந்த சட்டம் வந்த பிறகு, இந்த இடஒதுக்கீட்டை தந்த பிறகு எவ்வளவு பேருக்கு இடம் கிடைத்தது? என்பதை பார்த்தால், அதிக இடங்கள் வன்னிய பெருமக்களுக்கு கிடைத்திருக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்வேன். அதை மறந்துவிடக் கூடாது.
வேல்முருகன் (பாமக): இடஒதுக்கீட்டுக்கு பிறகு ஆயிரக்கணக்கில் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அந்த வாய்பை ஏற்படுத்தி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பதை நாங்கள் நன்றியோடு பார்க்கிறோம்.
அதற்காகத்தான் முதல்வரை விழுப்புரத்துக்கு அழைத்து வந்து, தனி சிம்மாசனம் போட்டு, நீங்கள்தான் தமிழ்நாட்டுக்கும், தமிழகத்திலே இருக்கின்ற சமூக நீதிக்கும் காவலராக இருக்கிறீர்கள்'' என்று எங்கள் அய்யாவும் (ராமதாஸ்) , சின்ன அய்யாவும் (அன்புமணி) அறிவித்தார்கள்.
ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்து இங்கு குடியேறி முன்னேறிய சமூகத்தினர், எம்.பி.சி. என்கிற சாதிச் சான்றிதழ்களை வாங்கி, தங்களால் கிடைத்த இட ஒதுக்கீட்டின் முழுப் பயனையும் நாங்கள் பெற முடியாமல், அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காகத்தான் தொகுப்பு இடஒதுக்கீடு (கம்பார்ட்மென்டல் ரிசர்வேஷன்) என்ற அடிப்படையில், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் கணக்கெடுத்து சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதியை நீங்கள் நிலைநாட்டித்தர வேண்டும்.
கள்ளத்தோணி...
முதல்வர் கருணாநிதி: அப்படியொரு மாறுதல் செய்தால், அதற்குப் பிறகும் ஆந்திராவிலே இருந்து, கர்நாடகாவில் இருந்து இப்படி கள்ளத்தோணியிலே யாரும் வரமாட்டார்கள் என்று வேல்முருகன் உறுதி அளிக்க முடியாது. ஆகையால், இப்போது உள்ள நிலையில் அந்த தவறு நடந்தால், அதை தட்டிக்கேட்க, தடுத்து நிறுத்த இந்த அரசு நிச்சயமாக தயங்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 25 புதிய விடுதிகள்:
முன்னதாக இந்தத் துறையின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்,
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு 2010-2011 நிதியாண்டில் மொத்தம் 25 விடுதிகள் கட்டப்படும்.
கள்ளர் சீரமைப்புத்திட்டத்தின் கீழ் செயல்படும், இரு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். 7 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 18 கூடுதல் வகுப்பறை கட்டப்படும்.
பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் 1000 பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கணினி மென்பொருள் மற்றும் ஆங்கில பேச்சுத் திறன் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.
ரூ.45 லட்சத்தில், பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் விடுதிகளுக்கு தலா 2 கணினிகள் வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications