இந்தியாவில் சிகிச்சை பெற வழியில்லை-மீண்டும் இலங்கை செல்கிறார் பார்வதி அம்மாள்
கொழும்பு: இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பு மங்கிப் போய் விட்டதாலும், மலேசியாவில் தொடர்ந்த தங்க முடியாத நிலை காணப்படுவதாலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
பார்வதி அம்மாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பக்கவாதம், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் இந்தியாவில் நல்ல சிகிச்சை கிடைக்கும் என்பதால் அங்கு அழைத்துச் செல்லுமாறுடாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கடந்த 16ம் தேதி மலேசியாவிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் பார்வதி அம்மாளுக்கு விசா கொடுத்த இந்திய அரசு அவரை விமானத்திலிருந்து கூட இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வினோதமாக நடந்து கொண்டது.
இதையடுத்து மலேசியாவில் மேலும் ஒரு மாதம் தங்க அவருக்கு விசா நீட்டிக்கப்பட்டது. அது மே 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் பார்வதி அம்மாளுக்கு கனடா அல்லது சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான அனுமதி கிடைத்தால் அங்கு அழைத்துச் செல்ல தமிழ் ஆர்வலர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் கனடாவிலும், இந்தியாவிலும் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதையடுத்து அவர் மீண்டும் இலங்கைக்கே அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
பார்வதி அம்மாளின் உறவினரான சிவாஜிலிங்கம் அடுத்த மாதம் 12ம் தேதிக்குள் மலேசியா சென்று பார்வதிஅம்மாளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்லவுள்ளார். கொழும்புக்கு கூட்டிவந்து பின்னர் யாழ்ப்பாணத்திற்கு பார்வதி அம்மாள் அழைத்துச் செல்லப்படுவார்.
தமிழக அரசுக்கு தொடர்பில்லை-ஹைகோர்ட்:
இதற்கிடையே பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது.
அதில் பார்வதியம்மாளை மலேசியாவில் இருந்து சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஜெயசிங் ஆஜராகி வாதாடியபோது,
இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்று கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிள்ளையான் குழு இந்தியா வருகை:
இந் நிலையில் இலங்கை கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழு இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ், சமீபத்தில் கொழும்பில் சந்திரகாந்தனை நேரில் சந்தித்துப் பேசியபோது அவரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், இதையேற்று அவரது தலைமையிலான குழு இந்தியா வரவுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் இணையத் தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தமது இந்தியப் பயணத்தின்போது, அக்குழுவினர் இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளதாக சந்திரகாந்தன் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆசாத் மெளலானா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications