ரயில்களில் டிக்கெட் காலி - சென்னைக்கு 40 சிறப்பு பஸ்கள் இயக்கம்
நெல்லை : ரயில்கள் அனைத்தும் நிரம்பி வருவதால் நெல்லையிலிருந்து சென்னைக்கு 40 சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன.
கோடை விடுமுறையை ஓட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயி்ல்களிலும் முன்பதிவு டிக்கெட்கள் காலியாகி விட்டன. இதனால் தட்கல் டிக்கெட்டுகளை மக்கள் நம்பியுள்ளனர். கோடை விடுமுறை தொடங்கியதால் நெல்லை, சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரயில்கள், பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதுகின்றன.
ரயில்களில் டிக்கெட்டுகள் காலியாகி விட்டதை போல அரசு பஸ்களிலும் ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
இதனால் பயணிகள் வசதிக்காக கோடைகால சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. நெல்லை அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து 40 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுவதாக பொது மேலாளர் முருகன் தெரிவித்தார். மேலும் பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.