சிஆர்பிஎப் வீரர் மர்ம சாவு- கடையநல்லுரில் சாலைமறியல்
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் கிளப்புவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் அருகே குமந்தாபுரம் வடகாசியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஆதிசங்கரன். இவர் சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் என்ற நகரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார்.
4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிலாயில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு இறந்ததாக குமந்தாபுரத்திற்கு பெற்றோருக்கு தகவல் வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அவர் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து குமந்தாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. சிறு சிறு காயங்கள் உடலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் ஆதிசங்கரன் சாவில் மர்மம் இருப்பதாக அறிந்து ஆவேசமடைந்தனர்.
இதையடுத்து செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின் அவர்கள் உடலை வாங்கினர். இதுகுறித்து அப்பகுதியினர் ஆதிசங்கரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் உண்மைகளை மறைப்பதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications