போதைப் பொருள் வழக்கு- தலைமறைவாக இருந்த வக்கீல் சரண்
நெல்லை: போதை பொருள் வழக்கில் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வக்கீல், நெல்லை மாஜி்ஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜான்பால். இவர் கடந்த 2006ல் போலி பத்திரங்களை அடகு வைத்து வங்கியில் சுமார் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கினார். இது தொடர்பாக தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ஜான்பாலை தேடி வந்தனர்.
இதற்கிடையே ஜான்பால் தனது உதவியாளர் ஈஸ்வர மூர்த்தியிடம் தனக்கு பதில் குற்றத்தை ஓப்புக் கொண்டு சிறைக்கு செல்லுமாறு கூறினார். இதற்கு அவர் மறுக்கவே அவரது வீட்டுக்கு தபாலில் போதை பொருட்களை அனுப்பி வைத்தார். போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஈஸ்வர மூர்த்தியை கைது செய்தனர்.
ஈஸ்வர மூர்த்தி மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வர் மற்றும் டிஜிபிக்கு மனு அனுப்பினர். இதுகுறித்த விசாரணையில் ஈஸ்வர மூர்த்தி மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.
வழக்கில் குற்றவாளிகளாக ஜான்பால், தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த வக்கீல் முத்துகுமார், பாபு, நல்லகனி மற்றும் உடந்தையாக இருந்த போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஏட்டு செல்வராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
சிபிசிஐடி போலீசார் ஜான்பாலையும், இன்ஸ்பெக்டர் காநதியையும் கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஏட்டு செல்வராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். வக்கீல் முத்துகுமார் மட்டும் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த முத்துகுமார் நேற்று நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முத்துகுமாரை போலீசார் பாளை சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே பாளை விஎம் சத்திரம் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஓன்றும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications