குற்றப் பின்னணி கொண்ட 500 பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் அதிரடி நீக்கம்
குற்றப் பின்னணி கொண்டவர்களை கட்சியை விட்டு நீக்கி கட்சியை சுத்தப்படுத்த களம் இறங்கியுள்ளார் மாயாவதி. முதல் கட்டமாக இதுபோன்ற பின்னணியைக் கொண்ட 500 பேர் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இருப்பினும் இந்த நடவடிக்கையிலிருந்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், முக்கியத் தலைவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். அதாவது அப்பாவித் தொண்டர்களுக்கு மட்டும்தான் இந்த நடவடிக்கை பொருந்துமாம்.
இதுகுறித்து கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், நீக்கப்பட்டவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட சாதாரண தொண்டர்கள்தான் என்றார்.
நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் முக்தார் அன்சாரி மற்றும் அப்சல் அன்சாரி ஆகியோர். இருவரும் சகோதரர்கள். பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள். ஏற்கனவே ஏப்ரல் 16ம் தேதியே இருவரையும் மாயாவதி நீக்கி விட்டார். இருவரும் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. கிருஷ்னாணந்த் ராய் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மாயாவதியின் இந்த நடவடிக்கையை வெறும் ஜிம்மிக்ஸ் என்று மாயாவதியின் எதிரிகள் வர்ணித்துள்ளனர்.