இன்று முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம்
சென்னை: இன்று முதல் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப் படிவங்கள் விநியோகம் தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்ப படிவங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுவருகிற 29ம் தேதி வரைநடைபெறும். விண்ணப்ப் படிவங்களை நிரப்பி கொடுக்க கடைசி நாள் மே 31ம் தேதியாகும்.
ஜுன் 18-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. 28-ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. ஜுலை மாதம் 25-ந் தேதி கவுன்சலிங் முடிகிறது.
இன்று முதல் 29-ந் தேதி வரையில் (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர) தினசரி காலை 9.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500 (எஸ்.சி.,எஸ்.டி.பிரிவினருக்கு ரூ.250) ஆகும். ரொக்கமாகவோ, வங்கி டிமாண்ட் டிராப்ட் (டி/டி) ஆகவோ செலுத்தலாம்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையம், குரோம்பேட்டை எம்.ஐ.டி.வளாகம், புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக், பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரி ஆகிய மையங்களிலும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வாங்கலாம்.
தமிழகத்தில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 1 லட்சத்து 65 ஆயிரம் மாணவர் இடங்கள் உள்ளன. கல்லூரிகள் பெருமளவில் இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்குமே இடம் கிடைக்கும். கடந்த ஆண்டு 30 ஆயிரம் இடங்கள் கடைசி வரை நிரம்பவே இல்லை.
இந்த நிலையில் இந்தஆண்டு மேலும் 94 கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கும் சூழல் உள்ளது. எனவே கூடுதலாக 12 ஆயிரம் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.