தேர்தல் பற்றி பேச இப்போது அவசரமில்லை-கருணாநிதி
டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யை சந்தித்துப் பேசினார். மகளிர் மசோதாவை லோக்சபாவிலும் நிறைவேற்றுவது குறித்து அவருடன் பேசியதாக முதல்வர் கூறியுள்ளார்.
சோனியாவைப் பார்த்து விட்டுத் திரும்பிய முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை மக்களவையிலும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், தமிழகத்துக்கான அரிசி ஒதுக்கீட்டினை அதிகரிக்கும்படி மத்திய அரசிடம் பரிந்துரை செய்யுமாறு சோனியாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஒகேனக்கல் திட்டம் பற்றி பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆகையால் அதுபற்றி பேச தேவையில்லை என்றார்.
சட்டசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்துப் பேசினீர்களா என்ற கேள்விக்கு, தேர்தல் பற்றி பேசுவதற்கு இப்போது அவசரம் இல்லை என்றார் கருணாநிதி.
இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கையும் முதல்வர் கருணாநிதி சந்திக்கவுள்ளார்.
கருணாநிதியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோரும் உடன் இருந்தனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய அமைச்சர் ராஜா, முதல்வரின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியின் பெயரும் அடிபடுவதால் அதுகுறித்து முதல்வர் சோனியாவிடம் விளக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ராஜாவுக்கு முழு ஆதரவை ஏற்கனவே முதல்வர் கருணாநிதியும், திமுகவும் தெரிவித்து விட்டனர். ராஜா விலக மாட்டார் என்பதை நேற்று டெல்லி செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி சூசகமாகவும் தெரிவித்து விட்டார். இந்த நிலையில் இன்று சோனியாவை அவர் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது லோக்சபாவுக்கு அழகிரி வராமல் இருப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.