கசாப்பையும், அவனை ஏவியவர்களையும் தூக்கிலிட வேண்டும்- ஸ்மிதா சலஸ்கர்
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் கசாப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதை, தாக்குதலில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா, என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலஸ்கரின் மனைவி ஸ்மிதா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
அதே நேரத்தில் கசாப்பை தூக்கிலிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஸ்மிதா சலஸ்கர் கூறுகையில், இது எதிர்பார்த்த தீர்ப்புதான். கசாப்பை தூக்கிலிட்டால்தான் தீர்ப்பு முழுமை அடையும். இது தொடக்கம்தான். தீவிரவாத்த்திற்கு எதிரான போர் மேலும் வலுவடைய வேண்டும்.
கசாபோடு நின்று விடாமல் அவனை ஏவியவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களையும் தண்டிக்க வேண்டும் என்றார்.
தீர்ப்பை வரவேற்பதாகவும், கசாப் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் கவிதா கர்கரேவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மிலிந்த் தியோரா கூறுகையில்,கசாப்பை தூக்கிலிட வேண்டியது மிக மிக முக்கியமாகும் என்றார்.