ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அண்டாவுக்குள் அமர்ந்து உண்ணாவிரதம்
கோவில்பட்டி: கோவில்பட்டி நீர்வரத்து பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி தண்ணீர் நிரம்பிய அண்டா சட்டியில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கோவில்பட்டி பகுதிகளில் ஓடைகள் மற்றும் நீர்வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் உள்ளதால் லேசான மழை பெய்தால் கூட மழை நீர் செல்ல வழியின்றி கழிவு நீரும் சேர்ந்து சாலையெங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவு நீர் பொதுமக்கள் மீது வாரி இறைக்கப்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே நீர்வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அனைத்துலக அனைத்து சாதி, சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம் மற்றும் ஐந்தாவது துண் அமைப்பு சார்பில் நூதனமான முறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
நகராட்சி அலுவலகம் முன்பு தண்ணீர் நிரம்பிய அண்டா சட்டிகளில் அமர்ந்து அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம், உறுப்பினர்கள் ராஜா, சோலைச்சாமி, முருகன், பிச்சையா ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வராத வருவாய்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர் ஆகியரை கண்டிக்கும் விதமாக துண்டு பிரச்சுரங்களையும் வினியோகம் செய்தனர். அண்டாவில் தண்ணீரை நிரப்பி அதனை சாக்கடை நீராக பாவித்து உண்ணாவிரதம் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.