மீண்டும் ஸ்வைன்!: பொள்ளாச்சி பெண் என்ஜீனியருக்கு பன்றிக் காய்ச்சல்?!
கோயம்பத்தூர்: பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியருக்கு பன்றிக்காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதையும் கடுமையாக பாதித்த பன்றிக் காய்ச்சல் இந்தியாவையும் ஒரு கை பார்த்து விட்டு சமீபத்தில் தான் சற்று ஓய்ந்தது.
தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பரவி பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கோவையில் மீண்டும் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரு பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் பாதிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியரான மது நித்யா என்ற 28 வயதுப் பெண் பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 28ம் தேதி பொள்ளாச்சிக்கு வந்தார். அப்போது அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரியவே கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் வந்திருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், 'பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருந்து, மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு இருப்பதால், தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications